உன்னைப் பற்றிய நினைவுகளை
கவிதைகளாக பதியச் சொல்லி
நச்சரிக்கிறது
உன்னால் கைவிடப்பட்ட
எனது தனிமை
அம்மாவிடம் அழுது புலம்பியும்
அந்த பொம்மையை
அடைய முடியாத
அப்பாவி குழந்தையின்
ஏமாற்றத்தில் தெரிகிறது
உனக்கான எனது காதல்
உனக்கான கவிதைகளில்
நான் உருவாக்கிய
உவமைகளிலும்
உருவகங்களிலும்
உடனிருந்தே பயணப் படுகிறது
எனது சிந்தனை...
நீ இல்லாது
நகர்ந்து விட்டன
நாட்கள் நூறு
ஆச்சர்யம்தான் எனக்கும்
நீ இல்லாது விலகும்
வெற்றுக் கணத்தில்
வீழ்ந்து விடுவேன்-என்றுதான்
எண்ணியிருந்தேன்
கவிதைத் தோழன்தான்
காப்பாற்றியிருக்கிறான்
நம் காதலையும் சேர்த்து...
உன்னிடம் பேசத் தவறிய
வார்த்தைகளையும் சேர்த்து
வரைந்து விட்டது-என் கரம்
பேனா வழியாக
கவிதைகளாக...
நீ
பிரயானப்படும் பொழுதுகளில்
உன்னைப் பின்தொடரும்
என்னை திரும்பி பார்த்து -நீ
குறைத்துக் கொண்டே செல்லும்
இடைவெளியில் நிரம்புகிறது..
நமக்கான காதல்...
நீ ஓட்டி செல்லும்
மிதிவண்டி கூட சமயங்களில்
இறக்கை இல்லாத
விமானமாகத்தான் தெரிகிறது
எனக்கு...
அன்றொரு நாள் நாம்
கல்லூரிக்குள் நிறுத்தி வைத்திருந்த
சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று
பிணைந்திருந்தன...
காதலுக்குப் பின்
நாம் இருக்கப்போகும்
நிலையை ஞாபகப் படுத்திய படி...
மொழிகள் பல
கற்றதும் சரி
மறந்ததும் சரி
அனைத்தும் உன்னால்...
நீ புலர வைத்த
பொழுதுகள் எத்தனை என
எண்ணிப்பார்க்கின்றேன்
கணக்கின் கால்
வழுக்கி விடுகின்றது...
நீ வந்து
வசித்த பின்னர்தான்
'காளையார்கோவில்' எனக்கு
காதலியார் கோவில் ஆனது...
நீ வந்து சென்ற
பேருந்தின் கைப்பிடியில்
பதிந்திருக்கின்றன
உன் கைரேகையும்
அதன்மேல் என் கைரேகையும்
நம் இருவருக்குமிடையில்
பரவிக் கிடக்கும்
பரிதவிப்புகளில் -என்னை
நான் மீட்டுக் கொள்கிறேன்
உன்னிடமிருந்து...
காலம் கடந்துவிட்ட-என்
காதலை எத்தனை முறைதான்
காட்டிக் கொடுப்பது
உன்னிடம்?
எப்பொழுதும் உன்னிடம்
விளையாடிக் கொண்டிருக்கும்
உன் வீட்டு
செல்ல நாய்க்குட்டி கூடவா
சொல்ல வில்லை ?
பூட்டியிருக்கும் என்று
தெரிந்திருந்தும் உன் வீட்டிற்கு
ஒவ்வொரு
ஓணம் பண்டிகைக்கும்
வாழ்த்து சொல்ல
ஓயாமல் வந்து செல்லும்
என்னைப் பற்றி...
-மணி மைந்தன்
(அவளை விட்டு பிரிந்து முதன் முதலாக சென்னை சென்ற பொது தனிமையில் எழுதிய கவிதை.
*காளையார்கோவில் என்பது எங்கள் ஊர்..
*ஓணம் பண்டிகைக்கு கேரளம் சென்று விடுவது அவள் வீட்டார் வழக்கம். )


சைக்கிள் ...அருமை...காதல்...கற்பனை உணர்வுகள்...
ReplyDeleteகற்பனை அல்ல தோழி,,,
ReplyDeleteஎன் கல்லூரிக் காதல் நிஜம்..
உங்கள் வருகைக்கு நன்றி...
மிகவும் வரவேற்கிறேன்
-மணி மைந்தன்