உலகின் ஒளி
வருத்துகிறது அம்மா
குவார்ட்டரில் விஷம்
கலந்து வருகிறேன்
உன் கருவறை இருளில்
செத்துப் போக
உன் நைந்த புடவையில்
தூக்கிட்டுச் சாகும்
வரம் வேண்டும்
தா தாயே
காமம் கரைந்து விட்டது
குடி அலுத்து விட்டது
உயிரின் மறுபக்கம்
ஒட்டிக் கிடக்கும் உன்
புகைப்படத்தை இப்போதுதான்
பார்த்தேன் என் அம்மா
என்ன செய்தேன் உனக்கு
பொய்களை பரிசளித்தேன்
போதாமையில் தவிக்க விட்டேன்
உன் புருஷனின் சாயல் கொண்டேன்
இருந்தும் என்னை
மன்னிக்கும் உனது கண்ணீரில்
எனது மரணம்
புன்னகைக்கிறது அம்மா
அழுக்கு முந்தானையில்
அழும் பிள்ளையோடு
தாய் தந்த பிச்சையிலே பாடும்
குருட்டு சிறுக்கி
என்னை மிதித்துக் கொன்றால்
மகிழ்ந்து மரிப்பேன்...
சதை எறிந்த
சிதை மேட்டில்
என்ன செய்கிறாய்
சின்னப் பையா
அம்மா போய் விட்டாள்
அப்பாவிடம் கோபித்துக் கொண்டு...
காய்த்த உன் கைகளை
தடவினேனில்லை
வெடித்த உன் பாதங்களை
வருடினேனில்லை
நீ வரக்கூடாத
இடுகாட்டில் அம்மா
என் பிணத்தை
நாய்கள் தின்னட்டும்
கருவறையில் புரண்டவன்
கடைசிவரை திருந்த மாட்டான்
என தெரிந்த பிறகும்
முத்தமிடுகிறாய்
முலைப்பாலிட்ட
அதே அன்போடு
அகாலத்திலும் இருமும்
பேரழகி பெருந்தேவி
உன் நெஞ்சுச் சளிஎல்லாம்
நெய்யாகி எரியுதடி
என் 'உயிர் விளக்கு'
தற்கொலை முயற்சியில்
பிழைத்து
நீ மருத்துவமனையில்
இருந்த இரவில்
அழுது கொண்டே
அத்தை வீட்டில்
சாப்பிட்டவன் நான்
அம்மா ஐ லவ் யூ...
(இரண்டு வருடங்களுக்கு முன்பு ரசித்த கவிதை ,
எப்போது படித்தாலும் கண்ணில் நீர் வரவழிக்கும் வரிகள்)





No comments:
Post a Comment