Thursday, 1 December 2011

மரணம்..!

நான்கு தினங்களுக்கு முந்தைய இரவில் நண்பன் விஜயிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. வேலைக் களைப்பின் இடையில்  பேசியபோது ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. அவனுடைய தந்தை எனக்கு மாமா ஒரு விபத்தில் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தான். அதன் பின் மற்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து அடித்துப்பிடித்து, நள்ளிரவு 1  மணிக்கு பஸ் பிடித்து மதுரை அரசு மருத்துவமனை சென்று ஆறுதல் சொல்லி, உடலை ஊருக்கு எடுத்து சென்ற பொது ஊரே அழுதது . பின்னர் மறுநாள் இரவு கிளம்பி சென்னை வந்து சேர்ந்தேன்.. பயணத்தின் போது பல நினைவுகள் என்னுள் நிழலாக ஆடின.. எப்பொழுதும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் அந்த மாமா உடலை அடக்கம் செய்ய தூக்கி சென்ற போது தூக்கிய கைகளையும், தோளையும் விட மனசு அதிகம் வலித்தது.

எந்த ஒரு மரணமும் அவர்களின் அன்புக்குரியவர்களிடம் ஒரு இழப்பை பதிவு செய்து விடுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாமல் சிவகங்கை  அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்த பொழுது ஒரு சிறிய பெண்ணை அனுமதித்திருந்தார்கள்.இரவு பாம்பு கடித்து விஷம் ஏறியதால் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். விஷம் இறங்கி  விட்டதால் பயம்  இல்லை  என்று  கூறிவிட்டு  சென்றுவிட்டார்கள். காலையில் எழுந்து அழகாக பல் விளக்கிக் கொண்டிருந்த பெண்ணை சிறிது நேரத்தில் பிணமாக தள்ளிச் சென்றார்கள் .


இன்னொரு முறை நண்பன் ஒருவன் இரவு முழுவதும் எங்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றான்.. காலையில் அவன் விஷம் குடித்து  இறந்து விட்டதாக போன் செய்தார்கள்.. மச்சான்  கரிகாலன் நான் மதுரை சென்றிருந்த பொழுது எங்கள் ஊர் தெப்பக்குளத்தில் மூழ்கி இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கிறார்கள். எத்தனையோ முறை நானும் அவரும் ஒன்றாக பல கிணற்றில் குளித்திருக்கிறோம்.


திடீர் மரணங்கள்தான் நம்மை திகைக்க வைத்து விடுகின்றன. அடுத்த வீட்டில் தீப்பற்றும் போது அணைக்க ஓடுபவனின் மனநிலையில்தான் அடுத்தவர்களின் மரணத்திற்கு ஓடும்போதும் இருக்கின்றோம். காலையில் நம்முடன் உணவருந்தியவர்களுக்கு மாலையில் வாய்க்கரிசி போடுகின்றார்கள்.  பிறகும் குழந்தைகள் ஏன் பிறந்தோம் என்று தெரியாமலேயே இறந்து விடுகின்றன. உலக மகா பணக்காரனும் இறந்த பின் ஓலை பாடை கட்டிய ஒப்பனையுடன் செல்கிறான். வெட்டு  வாங்கியன் வலிகளை மறந்து வெட்டியவனை  நோக்கி ஓடுகிறான்..



ஒருமுறை பிணவறைக்கு அருகில் நின்ற பொழுது ஒரு சிறுவனின் பிணம் வெளியே வந்தது. அடிபட்ட அறிகுறியே இல்லாமல் அழகாக படுத்திருந்தான்.  நன்றாக உற்றுப் பார்த்த பொழுது கழுத்தின் அருகில் சிறிது உறைந்த ரத்தம் .
நனன்பர்களுடன் மரத்தில் விளையாடிய பொழுது மரக்கிளை முறிந்து குச்சி கழுத்தில் குத்தியதால் உடனடி மரணம். அரைநிமிடம் முன்பு வரை தங்களுடன் விளையாடிய நண்பன் இறந்து போனதை ஜீரணிக்க முடியாமல் திகைத்து நிற்கிறார்கள் சிறுவர்கள்.


மேற்று முன்தினம் வரை லிபியாவின் முடி சூடிய மன்னராக வலம் வந்த கடாபியை நேற்று புரட்சிப் படையினர் நாயைப் போல கொன்ற தகவல்கள் வருகின்றன.. இறந்து போனவர்களின் வலியையும் சேர்த்து  அனுபவிக்கிறார்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் அன்புக்குரியவர்கள்..





இதற்கிடையில் அடுத்தவர்களின் கஷ்டங்களை எண்ணிப்பார்க்கதவர்கள், சுயநலவாதிகள், அளவுக்கு அதிகமாக பணம் சேர்ப்பவர்கள், குடியால் சுற்றி இருக்கும் அனைவரையும்  துன்புறுத்துபவர்கள், யாரையும் மதிக்காதவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள், சக உயிர்களிடத்தில் அன்பு செலுத்தாதவர்கள், அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன் .வாழ்க்கை என்னவென்பது புரிய வேண்டுமென்றால் கொஞ்சம் அரசு மருத்துவமனை பிணவறை வரை சென்று வாருங்கள். உங்கள் சக தோழர்கள் உங்களைப் போலவே வாழ்ந்தவர்கள் அங்கே  இடமின்றி கிடத்தி வைக்கப் பட்டிருக்கலாம்..




தற்கொலை முடிவில் இருக்கும் நண்பர்களே தாராளமாக செய்து கொள்ளுங்கள். ஒரு சின்ன நிபந்த்தனை. உங்கள் உயிருக்கு  பதிலாக வழ வேண்டும் என்று நினைத்திருந்த ஒருவரின் சடலத்தை உயிர்ப்பித்து விட்டுச் செல்லுங்கள். யாருக்கும்  உதவாத சுயநலவாதி மனிதர்களே , சாகும்  போது நீங்களே போய் சுடுகாட்டில் படுத்துக் கொள்ளுங்கள். இரண்டு  மாதத்திற்கு முன்பு   தூரத்து உறவு பெரியப்பா ஒருவர் விபத்தில் இறந்ததால் வீட்டுக்கு சென்றிருந்தேன். 80  கிலோ உடம்பை ஒரு சிறு துணியில் கட்டிக் கொடுத்தார்கள். ஒரு மனிதனுடன் கடைசிவரை செல்வது அந்த துணிதான்..



ஆனாலும் அடுத்த மரணச் செய்தி வரும்வரை மறுபடியும் அனைத்தையும் மறந்து ஆளாய்ப் பறக்கிறார்கள் இந்த அப்பாவி மனிதர்கள்...
                                                                
                                                                            -   நன்றியுடன் மணி மைந்தன்

No comments:

Post a Comment